கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா?
கோவை: கோவை வடக்கு தொகுதியை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கி உள்ளது. கடந்த முறை கோவை தெற்கு தொகுதியை பாஜக பெற்றது. அங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிட்டார். அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் மயூரா எஸ். ஜெயகுமார் போட்டியிட்டார். இதில் கடுமையான போட்டிக்கு பிறகே வானதி வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இப்போது கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் அண்ணாமலை அங்கு போட்டியிலாம் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்.
கோவை வடக்கு தொகுதியை பொறுத்தவரை 2011-ல் தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது முதல் 2021 வரை நடந்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் அதிமுகவே இங்கு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ஜுனன், திமுக கூட்டணியில் இருந்த இராமச்சந்திரனை (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தோற்கடித்து அபாரமாக வெற்றி பெற்றார். அதிமுகவிற்கு வலுவான செல்வாக்கு உள்ள தொகுதிகளில் கோவை வடக்கும் ஒன்று. இங்கு பாஜகவிற்கும் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர்.
அதிமுக பாஜகவிற்கு ஒதுக்கிய 27 தொகுதிகளில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளில் இதுவும் ஒன்று. ஏனெனில் கடந்த முறை நாகர்கோவில், கோவை தெற்கு, மொடக்குறிச்சி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இதில் இந்த முறையை கோவை மாவட்டத்தில் கோவை தெற்கினை அதிமுக கொடுக்கவில்லை.. அதற்கு பதில் மூன்று முறை அதிமுக வென்ற, கோவை வடக்கு தொகுதியை கொடுத்துள்ளது. கோவை வடக்கு தொகுதியை அதிமுகவிடம் பாஜக கேட்டு வாங்க காரணம் இல்லாமல் இல்லை..
2024 நாடாளுமன்றத் தேர்தலில், கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் தான் மிக அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் அண்ணாமலை கோவை வடக்கில் 82,000க்கு அதிகமான வாக்குகளை பெற்றார். கோவை தெற்கு தொகுதியில் 78,000 வாக்குகளும், சிங்காநல்லூர் தொகுதியில் 77,000 வாக்குகளும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 75,000 வாக்குகளும், பல்லடம் 72,000 வாக்குகளும், சூலூர் 65,000 வாக்குகளும் பெற்றிருந்தார்.